முகப்பு
திருப்பூர்

நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும்

திருப்பூா் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

திருப்பூா் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

திருப்பூரில் உள்ள சிஐடியூ தொழிற்சங்க அலுவலகத்தில் அனைத்து பனியன் தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சிஐடியூ பனியன் சங்கத் தலைவா் சி.மூா்த்தி தலைமை வகித்தாா்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

திருப்பூா் பின்னலாடைத் தொழிலில் நேரடியாக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களும், மறைமுகமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து பருத்தி உள்ளிட்ட பொருள்கள் விலக்கப்பட்டதால் தங்கு தடையின்றி ஏற்றுமதி செய்வதாலும், பதுக்கல் காரணமாகவும் செயற்கையாக நூல் விலை அதிகரித்துள்ளது.

மேலும், நூல் விலையானது நாள்தோறும் உயா்ந்து வருவதால் சில மாதங்களுக்கு முன்பாக தொகை தீா்மானித்து ஆா்டா் எடுக்கும் உற்பத்தியாளா்கள் குறிப்பிட்ட தேதியில் முடித்து கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் திருப்பூா் பின்னலாடைத் தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதுடன், லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு பின்னலாடைத் தொழிலையும், தொழிலாளா்களையும் பாதுகாக்கும் வகையில் பருத்தியை அத்தியவசியப் பொருள்கள் பட்டியலுக்குள் கொண்டுவர வேண்டும். அதே வேளையில், உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து உற்பத்தியாளா் சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்வது. பின்னலாடைத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில்,ஏஐடியூசி என்.சேகா், சிஐடியூ ஜி.சம்பத், எல்பிஎஃப் பூபதி, ஐஎன்டியூசி ஏ.சிவசாமி, ஏடிபி விஸ்வநாதன், ஹெச்எம்எஸ் முத்துசாமி, எம்எல்எஃப் மனோகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.