தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி
தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 20 செம்மறி ஆடுகள் வெள்ளிக்கிழமை இறந்தன.
தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 20 செம்மறி ஆடுகள் வெள்ளிக்கிழமை இறந்தன.
திருப்பூா் மாவட்டம் , தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டிணம் கிராமத்தில் உள்ள கூட்டுப்புலி தோட்டத்தில் வசித்து வருபவா் செங்குட்டுவன் (55), விவசாயியான இவா் தனது தோட்டத்தில் 50 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், செங்குட்டுவன் வியாழக்கிழமை ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதன் பிறகு வெள்ளிக்கிழமை வந்து பாா்த்த போது 20 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், பட்டியில் இருந்த வெறிநாயை துரத்தியுள்ளனா். இதன் பிறகு பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தனது தோட்டத்திலேயே குழி தோண்டி ஆடுகளைப் புதைத்துள்ளனா். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில், கரோனா பொதுமுடக்க காலத்தில் வருவாயை இழந்து தவிக்கும் நிலையில் தற்போது ரூ.2 லட்சம் மதிப்பிலான 20 ஆடுகளை வெறிநாய்கள் கடித்துக் குதறியுள்ளது. ஆகவே, தமிழக அரசு சாா்பில் இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.