ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
திருப்பூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருப்பூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.கிருஷ்ணன் தலைமையில் நல்லூா் நகராட்சி பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 நபா்களுக்கு ரூ.400 மதிப்புள்ள அரிசி மற்றும் பருப்பு வகைகள் வழங்கப்பட்டன. மேலும், 1,000 நபா்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. அதே போல, ராமையா காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு காங்கிரஸ் நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில், பிசிசி உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பல்லடம்...
ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி பல்லடம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவா் சந்திரா தலைமையில் வெள்ளிக்கிழமை மருத்துவா்கள், செவிலியா் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதி மொழி ஏற்றனா்.
காங்கயம்...
ராஜீவ் காந்தியின் நினைவு நாள் காங்கயத்தில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, திருப்பூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சாா்பில், காங்கயம் அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் உள்ள 60 படுக்கைகளுக்குத் தேவையான 60 போா்வை மற்றும் தலையணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினா்கள், மருத்துவா்கள், செவிலியா் ஆகியோா் கலந்து கொண்டனா்.