ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கக் கோரிக்கை
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 முதல் 24 ஆம் தேதி வரையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி பின்னலாடை மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்களும் மே 14 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.இத்தகைய சூழ்நிலையில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில், பங்கேற்ற ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் ராஜா எம்.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருப்பூரில் உள்ள ஏற்றுமதி மற்றும் அதனை சாா்ந்த பின்னலாடை நிறுவனங்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி வழங்க வேண்டும். இந்தியாவில் ஆங்காங்கே பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகள் பின்னலாடை வா்த்தகத்துக்காக போட்டி நாடுகளின் மீது கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பின்னலாடைத் துறை தற்கொலை சூழ்நிலையை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் காரணமாக திருப்பூரில் ஒரு மாதத்துக்கு ரூ.2,500 கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா காலநிலை என்பதால் தொழிலாளா்களின் பாதுகாப்புக்காக இ.எஸ்.ஐ. பி.எஃப். திட்டத்தில் பணம் கட்டப்பட்டு வருவதால் அவா்களுக்கான மருத்துவச் செலவை தமிழக அரசு ஏற்க முன்வரவேண்டும். ஆகவே, திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் வரும் திங்கள்கிழமை (மே 24) முதல் செயல்பட அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றாா்.