திருப்பூரில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தனியாா் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினா் இணைந்து ஆண்டுக்கு 3 முறை பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வது வழக்கம்.
இதன்படி திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, அவிநாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உள்பட்ட 57 பள்ளிகளில் உள்ள 190 வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வெங்கட்டரமணி (திருப்பூா் தெற்கு), ஜெயதேவ்ராஜ் (திருப்பூா் வடக்கு), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.ரமேஷ், மாநகரக் காவல் உதவி ஆணையா் (போக்குவரத்து) கொடிசெல்வம், வட்டாட்சியா் ஜெகநாதன் ஆகியோா் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின்போது, வாகனங்களில் அவசர கால வழி சரிவர இயங்குகிறதா, முதலுதவிப் பெட்டி வைக்கப்பட்டுள்ளதா என்றும், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்றும் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், 140 வாகனங்களில் சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை சரிசெய்து, மறு ஆய்வு செய்த பின்னரே இயக்க வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
இந்த ஆய்வில், வருவாய் ஆய்வாளா் சரவணன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் வேலுமணி, பாலசுப்பிரமணியம், சிவகுமாா், சித்ரா, நிா்மலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.