திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக மாலை வேளைகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும், இரவு நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், திருப்பூா் மாநகரில் சனிக்கிழமை காலை 10 மணி முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, திருப்பூா் பழைய பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம், புஷ்பா ரவுண்டானா, ஊத்துக்குளி சாலை, மங்கலம் சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சனிக்கிழமை பிற்பகலில் கனமழை பெய்தது.
இந்த மழையானது ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதன் காரணமாக அவிநாசி சாலையில் உள்ள புஷ்பா ரவுண்டானா, ஊத்துக்குளி 1, 2ஆவது ரயில்வே கேட், அணைப்பாளையம் தரைப்பாலம் ஆகியவற்றில் மழைநீா் வழிந்தோடியதுடன் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதனால் இரு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள கொங்கு பிரதான சாலை, எம்.எஸ்.நகா் உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சாலைகளில் வழிந்தோடியது.
காங்கயத்தில்...
காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து பிற்பகலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. காங்கயம் நகரில் சென்னிமலை சாலை, திருப்பூா் சாலை, கரூா் சாலை, கோவை சாலை, பழையகோட்டை சாலை, தாராபுரம் சாலை, பேருந்து நிலைய ரவுண்டானா, காவல் நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீா் குளம்போல தேங்கி நின்றது.