திருப்பூர்: அமைச்சர் பங்கேற்கும் நிகழ்வில் திமுக - அதிமுக மோதல் ஏற்படும் சூழலால் பரபரப்பு
வெள்ளக்கோவில் அருகே வியாழக்கிழமை மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில் திமுக - அதிமுகவினரிடையே மோதல் ஏற்படும் சூழலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே வியாழக்கிழமை மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில் திமுக - அதிமுகவினரிடையே மோதல் ஏற்படும் சூழலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்தது மேட்டாங்காட்டுவலசு. காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இப்பகுதியில் திமுகவைச் சேர்ந்த மு.பெ.சாமிநாதன் வெற்றி பெற்று தற்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக உள்ளார். இவர் கடந்த நான்கு தினங்களாக வெள்ளக்கோவில், முத்தூர் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அச்சமயத்தில் பொது மக்களிடம் குறைகளைக் கேட்டும், மனுக்களைப் பெற்றும், முதியோர் உதவித்தொகை வழங்கல், கரோனா தடுப்பூசி முகாம் ஆய்வு போன்ற சில அரசு நிகழ்ச்சிகளும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் நடக்கின்றன.
இந்நிலையில் 28.10.2021 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மேட்டுப்பாளையம் ஊராட்சி மேட்டாங்காட்டுவலசில் 14 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படும் பால் உற்பத்தியாளர் சங்க கட்டடத்துக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மேட்டாங்காட்டுவலசு இருக்கும் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக அதிமுகவைச் சேர்ந்த ஆர்.வெங்கடேச சுதர்சன், மேட்டுப்பாளையம் ஊராட்சித் தலைவராக அவருடைய 80 வயது தாயார் ஆர்.விசாலாட்சி உள்ளனர். அடிக்கல்லை தாங்கள் தான் நாட்டுவோம் என அதிமுகவினர் கூறிவரும் நிலையில், திமுகவினரும் தயாராக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு இன்னும் சில மணி நேரமே இருக்கும் நிலையில் மேட்டாங்காட்டுவலசில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.