பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கோரி ஜன.18-ல் ரயில் மறியல்: நிட்மா சங்கம் அறிவிப்பு
பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கோரி நிட்மா (பின்னலாடை துணை உற்பத்தியாளர்கள் சங்கம்) சங்கம் சார்பில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கோரி நிட்மா (பின்னலாடை துணை உற்பத்தியாளர்கள் சங்கம்) சங்கம் சார்பில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
திருப்பூரில் உள்ள நிட்மா சங்க அலுவலகத்தில் அவசர ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் அகில் எஸ்.ரத்தினசாமி தலைமை வகித்தார். இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்: திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான பஞ்சு, நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- பைகள் இல்லாமல் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறலாம்
ஆகவே, பஞ்சு, நூல் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். இந்திய பருத்திக் கழகம்(சிசிஐ) இடைத்தரகர்களுக்கு பஞ்சை விநியோகிப்பதால் செயற்கையான விலை ஏற்றம் ஏற்படுகிறது. ஆகவே, இதனைத் தடுக்கும் வகையில் நூற்பாலைகளுக்கு மட்டுமே தேவைக்கு ஏற்ப பஞ்சை வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 18 ஆம் தேதி நிட்மா சங்கத்தில் இருந்து பேரணியாகச் சென்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நிட்மா சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தக்கூட்டத்தில், நிட்மா செயலாளர் சீமன்ஸ் ஆர்.ராஜாமணி, பொருளாளர் திருப்பூர் டெக்ஸ் வி.சுப்பிரமணியன், துணைத் தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.