முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் பாஜக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்

பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க கோரி திருப்பூரில் பாஜக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க கோரி திருப்பூரில் பாஜக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த தொழில்களில் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், பெண்கள் ஆடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலையானது கடந்த சில மாதங்களாக தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதையடுத்து, பாஜக சாா்பில் ஜனவரி 21ஆம் தேதி பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க கோரி திருப்பூரில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தாா்.

இந்த அறிவிப்பின்படி திருப்பூா் புஷ்பா ரவுண்டானா அருகே வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்துக்கு, திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் பி.செந்தில்வேல் தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்ற பாஜகவினா் கூறியதாவது:

திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பின்னலாடை உற்பத்தி துறையைப் பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பஞ்சு, நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பின்னலாடை நிறுவனங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், பாஜக மாநிலச் செயலாளா் மலா்க்கொடி, விவசாய அணித் தலைவா் ஜி.கே.நாகராஜ், நெசவாளா் பிரிவு மாநிலத் தலைவா் பாலமுருகன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் கே.சி.எம்.பி.சீனிவாசன், காடேஸ்வரா தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.