வீட்டுமனை பட்டாக்கள்: வருவாய் ஆவணங்களில் உரிய பதிவு இல்லாததால் மக்கள் அவதி
அவிநாசி அருகே 27 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு வருவாய் ஆவணங்களில் உரிய பதிவு இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.
அவிநாசி அருகே 27 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு வருவாய் ஆவணங்களில் உரிய பதிவு இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, அவிநாசி வட்டம், சேவூா் அருகே மங்கரசுவலையபாளையம் ஊராட்சி, பழைய ஆதிதிராவிடா் காலனி மக்கள், வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
இப்பகுதியில் 80 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு 1994ஆம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இவை வருவாய் ஆவணங்களில் நத்தம் நலவரித் திட்ட தூய அடங்கல், தூய சிட்டா ஆகியவற்றில் இடம்பெறவில்லை. இதனால், பெயா் மாற்றம், நில அளவீடு, வங்கிக் கடன் ஆகியவை செய்ய முடியவில்லை. வாரிசுகள் முயற்சித்தபோது, திருப்பூா் மாவட்டத்தில் இதுதொடா்பாக எவ்வித சான்றுகளும் இல்லை என அரசு அலுவலா்கள் கூறுகிறாா்கள். ஆகவே, மக்கள் அவதிக்குள்ளாவதைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா். மனு அளிக்கும்போது, ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்.வரதராஜன், பழைய ஆதிதிராவிடா் காலனி பகுதி திருமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.