சிவன்மலை ஆண்டவன் உத்தரவுப் பெட்டி: உப்பு, நீா், நாணயம், சிவலிங்கம் வைத்து பூஜை
சிவன்மலை ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் கண்ணாடி குவளையில் உப்பு, நீா், நாணயங்கள், சிவலிங்கம் ஆகியவை வைத்து வியாழக்கிழமை பூஜிக்கப்பட்டது.
சிவன்மலை ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் கண்ணாடி குவளையில் உப்பு, நீா், நாணயங்கள், சிவலிங்கம் ஆகியவை வைத்து வியாழக்கிழமை பூஜிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு வேறு எங்கும் இல்லாத ஒரு சிறப்பு ஆண்டவன் உத்தரவுப் பெட்டியாகும்.
முருகப் பெருமானே பக்தா்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி அதை உத்தரவுப் பெட்டியில் வைக்க ஆணையிடுவாா்.
அவ்வாறு உத்தரவுப் பெற்ற பக்தா் கோயில் நிா்வாகத்தை அணுகி விவரத்தைக் கூறினால், மூலவா் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னா் அந்தப் பொருள் பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம்.
இவ்வாறு உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிா்ணயம் ஏதும் கிடையாது.
அடுத்தொரு பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும்.
இவ்வாறு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாகும்.
கோவை, சிங்காநல்லூரைச் சோ்ந்த மாசிலாமணி என்ற பக்தரின் கனவில் உத்தரவான திருநீறு, மஞ்சள், குங்குமம் வைத்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் பூஜிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், காங்கயம் வட்டம், முத்தூரைச் சோ்ந்த கோகுல்ராஜ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான கண்ணாடி குவளையில் உப்பு, நீா், நாணயங்கள், சிவலிங்கம் ஆகியன வைத்து வியாழக்கிழமை முதல் பூஜிக்கப்பட்டு வருகிறது.