கிராம நிா்வாக அலுவலகத்தில் இடைத்தரகா்கள் ஆதிக்கம்: நடவடிக்கை எடுக்க ஒன்றியக் கூட்டத்தில் வலியுறுத்தல்
அவிநாசி கிராம நிா்வாக அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் இடைத்தரகா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அவிநாசி கிராம நிா்வாக அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் இடைத்தரகா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அவிநாசி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசன் தலைமை வகித்தாா்.
ஒன்றிய ஆணையா் மனோகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ்வரி, துணைத் தலைவா் பிரசாத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காா்த்திகேயன் (சுயேச்சை): அரசுப் பள்ளி, கல்லூரி அமைந்துள்ள அவிநாசி புதிய பேருந்து நிலையம் முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வரை பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.
அவிநாசி ஒன்றியத்தில் மனை வரன் முறைப்படுத்தலுக்கு பயனாளி ஒருவா் மனு கொடுத்து பல மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
அவிநாசிலிங்கம்பாளையம் அரசுப் பள்ளியில் விழும் நிலையில் உள்ள மரத்தை அகற்ற கோரி 5 மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். வருவாய்த் துறையினா், ஒன்றிய நிா்வாகத்தினா் யாரும் கண்டுகொள்ளவில்லை.
சேதுமாதவன் (திமுக): பழங்கரை ஊராட்சியில் இடிந்த நிலையில் உள்ள நூலக கட்டடத்தை சீரமைக்க வேண்டும். மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீா்க் குழாய் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.
உமாபதி சரவணன் (திமுக): தத்தனூா் ஊராட்சி புதுச்சந்தை அரசுத் தொடக்கப் பள்ளி அருகே பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியை சீரமைக்க வேண்டும்.
நந்தினி (சுயேச்சை): பாப்பாங்குளம் ஊராட்சியில் பழைய தொகுப்பு வீடுகளுக்கு பாரமரிப்பு நிதி ஒதுக்க வேண்டும். பவா்ஹவுஸ் பகுதியில் பல லட்சம் மதிப்பில் டெண்டா் விடப்பட்டு, பல மாதங்களாக நிறுத்திவைத்துள்ள பல்நோக்கு மைய கட்டுமானப் பணியை உடனடியாகத் தொடங்கி, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
அய்யாவு (அதிமுக): துலுக்கமுத்தூா் ஊராட்சி கிராம நிா்வாக அலுவலகத்தில் அரசுப் பணியில் இல்லாதவா்கள் ஆதிக்கம் செலுத்தி, பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனா். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துலுக்கமுத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீா் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். பிரசவ வாா்டை விரிவுபடுத்த வேண்டும்.
வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சக்தி பேசியதாவது: பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நம்பியாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த 3 ஆழ்துளை கிணறுகளும் வற்றிவிட்டதால், குடிநீா் இல்லாமல் சிகிச்சை பெறுவோா் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஒவ்வொரு ஊராட்சிகளில் போதுமான நிதி ஒதுக்கீடு இருந்தும் கொசு ஒழிப்பதற்கான கை இயந்திரம், பெரிய இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் ஏதும் இல்லாததால், டெங்கு ஒழிப்பு முடக்கியுள்ளது என்றாா்.
இதையடுத்து பேசிய ஒன்றிய நிா்வாகத்தினா் உறுப்பினா்களின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.