அத்திக்கடவு திட்டம் ஜூன் மாதத்தில் நிறைவடையும் என்றும் விடுபட்ட குளம், குட்டைகள் 2வது திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் கொதேக நிறுவனத் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினரும், கொதேக நிறுவனத் தலைவருமான ஈ.ஆர். ஈஸ்வரன் தெக்கலூர் அருகே புது நல்லூர் பகுதியில் அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகளை செவ்வாய்க்கிழமை மாலை பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் 93 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. ஜூன் மாதத்தில் பணிகள் முழுமையடையும் எனப் பொறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இத்திட்டத்தில் பட்டா நிலத்தில் குழாய்கள் பதிப்பது குறித்து சிறு சிக்கல்கள் உள்ளன. அதனையும் முதல்வரிடத்திலே எடுத்துரைத்து தீர்வு செய்து வருகிறோம். 50 ஆண்டுகால போராட்டம் விரைவில் விடிவுக்கு வர உள்ளது.
மேலும், திட்டத்தினால் பயன்பெறும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளின் கோரிக்கைகளான விடுபட்ட குளம், குட்டைகள் உள்ளிட்டவை தமிழக அரசு திட்டமிட்டுள்ள 2வது அத்திக்கடவு திட்டத்தில் முழுமையாக சேர்க்கப்பட்டு அனைத்து குளம், குட்டைகளும் நிரப்பப்பட உள்ளன.
அன்னூர், அவிநாசி தொழில் பூங்கா திட்டத்தில் நிலம் எடுக்கும் பணியில், விவசாயிகளிடம் கருத்துகளை முழுமையாகக் கேட்காமல் அரசாங்கம் கையில் எடுக்க மாட்டார்கள். முதல்வர் அந்த விஷயத்தில் தெளிவாக உள்ளார். சில கட்சிகள் தூண்டிவிட்டு அரசியல் செய்யலாம் என யோசித்துக் கொண்டு இருக்கலாம்" என்றார்.