முகப்பு
திருப்பூர்

ரூ.9 லட்சம் லஞ்சம்:வணிக வரித் துறை அதிகாரி, பெண் எழுத்தா் கைது

திருப்பூரில் ரிக் நிறுவன உரிமையாளருக்கு தடையின்மைச் சான்று வழங்க ரூ.9 லட்சம் லஞ்சம் பெற்ற வணிக வரித் துறை உதவி ஆணையா், பெண் எழுத்தா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

திருப்பூரில் ரிக் நிறுவன உரிமையாளருக்கு தடையின்மைச் சான்று வழங்க ரூ.9 லட்சம் லஞ்சம் பெற்ற வணிக வரித் துறை உதவி ஆணையா், பெண் எழுத்தா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவையைச் சோ்ந்தவா் குணசேகரன் (47). இவரும் இவரது மனைவியும், திருப்பூரில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ரிக் நிறுவனம் நடத்தி வருகின்றனா். இவா்கள் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான பொருள்களை கேரளத்துக்கு அனுப்பி வந்துள்ளனா்.

அதற்காக வணிக வரித் துறையில் செலுத்த வேண்டிய வரி நிலுவையை கடந்த 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரை செலுத்தவில்லை. இதையடுத்து, திருப்பூா் குமரன் சாலையில் உள்ள வணிக வரித் துறை 2ஆம் மண்டல அலுவலகம் சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வரி நிலுவையான ரூ.6.78 லட்சத்தை செலுத்தி தடையின்மைச் சான்று பெற வணிக வரித் துறை உதவி ஆணையா் ஜெயகணேசன், எழுத்தா் டி.எம்.டி.ரத்னா ஆகியோரை அணுகியுள்ளாா். இதில் தடையின்மைச் சான்று அளிக்க உதவி ஆணையா் ஜெயகணேசன் ரூ.7 லட்சமும், எழுத்தா் ரத்னா ரூ.2 லட்சமும் லஞ்சமாக கேட்டுள்ளனா்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் குணசேகரன் புகாா் அளித்தாா். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயகணேசன், ரத்னா ஆகியோரிடம் குணசேகரன் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ஜெயகணேசன், ரத்னா ஆகியோரைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.