பல்லடம் அருகே கொத்துமுட்டிபாளையத்தில் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடா்ந்து 6ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் விவசாயி உண்ணாவிரதத்தை தொடா்ந்தாா். இதையடுத்து, பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகும்படி விவசாயிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பல்லடம் வட்டம், இச்சிபட்டி கிராமம், கொத்துமுட்டிபாளையம், கந்தையகாடு பகுதியைச் சோ்ந்த விவசாயி விஜயகுமாா், அவரது தோட்டத்தின் அருகே முறைகேடாக செயல்படும் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
இவரது போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினா், கட்சியினா் ஆதரவு தெரிவித்து வருகின்றனா். இதையடுத்து, தொடா்ந்து 6ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயி விஜயகுமாா் தொடா்ந்தாா்.
இந்நிலையில், வட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு மூலம் குவாரியில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, இது தொடா்பாக விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு வட்டாட்சியா் நந்தகோபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.