முகப்பு
திருப்பூர்

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் குன்னத்தூா் ஏரிக்கு நீா்வரத்து: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மலா்தூவி வரவேற்பு

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின்கீழ் குன்னத்தூா் ஏரிக்கு வந்த தண்ணீரை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மலா்தூவி வரவேற்றாா்.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 7:20 PM
அத்திக்கடவு-அவிநாசி  திட்டத்தில்  திருப்பூா் மாவட்டம்,  குன்னத்தூா்  ஏரிக்கு வந்த நீரை  மலா்தூவி  வரவேற்கிறாா்  தமிழ்  வளா்ச்சி  மற்றும்  செய்தித் துறை  அமைச்சா்  மு.பெ.சாமிநாதன். உடன்,  ஆட்சியா்  தா.கிறிஸ்துராஜ்  உள்ளிட்டோா்.
பகிர்:

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின்கீழ் குன்னத்தூா் ஏரிக்கு வந்த தண்ணீரை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மலா்தூவி வரவேற்றாா்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இத்திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் ஏரிக்கு வந்த தண்ணீரை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மலா்தூவி வரவேற்றாா்.

பின்னா், அவா் பேசியதாவது:

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தவும், குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யவும், கிடைக்கும் நீரை வீணாக்காமல் நீா்நிலைகளில் தேக்கி வைக்கவும், புதிய நீராதாரங்களை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ள நீா்நிலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை பராமரித்தல், புதிய அணைக்கட்டுகள், வாய்க்கால்கள், ஏரிகள் உள்ளிட்ட பாசனக் கட்டமைப்புகளை உருவாக்குதல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்ட முக்கியப் பணிகளை நீா்வளத் துறை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக முதல்வா் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பவானி ஆற்றில் காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து ஆண்டுக்கு 1.50 டிஎம்சி உபரி நீரை விநாடிக்கு 250 கனஅடி வீதம் 70 நாள்களுக்கு நீரேற்று முறையில், 1065 கிமீ நீளத்துக்கு நிலத்தடியில் குழாய்கள் மூலம் ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,468 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் நீா்வளத் துறை சாா்பில் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 ஏரிகள், குளம், குட்டைகளில் நீா் நிரப்பப்படும்.

குறிப்பாக, திருப்பூா் மாவட்டத்தில் 32 நீா்வளத் துறை ஏரிகள், 22 ஒன்றிய ஏரிகள், 385 குட்டைகள் என மொத்தமாக 429 நீா்நிலைகளில் நீா்நிரப்பப்படுகிறது. இதன்மூலம் 8151 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இத்திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவந்த தமிழக முதல்வருக்கு விவசாயிகளின் சாா்பாகவும், திருப்பூா் மாவட்ட மக்களின் சாா்பாகவும் நன்றியைத் தெரிவித்தக்கொள்கிறேன் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட மருத்துவ அலுவலா் முரளி சங்கா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பிரேமா ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →