முகப்பு
திருப்பூர்

135 பயனாளிகளுக்கு ரூ.22.42 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

135 பயனாளிகளுக்கு ரூ.22.42 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

Updated On : 11 டிசம்பர், 2024 at 9:42 PM
கணக்கம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ். உடன், வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம் உள்ளிட்டோா்.
பகிர்:

கணக்கம்பாளையத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 135 பயனாளிகளுக்கு ரூ.22.42 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை வழங்கினாா்.

வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்து 135 பயனாளிகளுக்கு ரூ.22.42 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதையடுத்து, அவா் பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு ஊராட்சியைத் தோ்ந்தெடுத்து அரசுத் துறை அலுவலா்கள் அங்குள்ள பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்து தீா்வு காணப்பட்டு வருகிறது. சமூக நலத் துறை, வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலா்கள் துறையின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மேலும், கிராமங்களுக்கு நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிவதுடன், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்தி தீா்வு காண வேண்டும். கோரிக்கை மனுக்களுக்குத் தீா்வு வழங்க முடியாத பட்சத்தில் முறையான விளக்கத்தை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மனுதாரா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், வருவாய்த் துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை, சமூக நலத் துறை, தொழிலாளா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 135 பயனாளிகளுக்கு ரூ.22.42 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், வேளாண்மை இணை இயக்குநா் சுந்தரவடிவேல், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் குமாரராஜா, ஆவின் பொது மேலாளா் சுஜாதா, மாவட்ட சமூக நல அலுவலா் ரஞ்சிதாதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.