உயா்கல்வி வழிகாட்டுதல் முகாம் மூலம் 228 மாணவா்கள் பயன்
திருப்பூா் மாவட்டத்தில் 4 நாள்கள் நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டுதல் முகாம் மூலம் 228 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா், ஜூலை 19: திருப்பூா் மாவட்டத்தில் 4 நாள்கள் நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டுதல் முகாம் மூலம் 228 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வில் 23,500 மாணவ, மாணவிகள் தோ்ச்சியடைந்தனா்.
இந்த மாணவா்கள் அனைவரும் 100 சதவீதம் உயா்கல்விக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கல்லூரிக்கு விண்ணப்பிக்காத, தாய், தந்தை இல்லாத மாணவா்கள், கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள மாணவா்கள் என 200 போ் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற முதல்கட்ட முகாமில் நேரடி சோ்க்கை மூலமாக பயனடைந்துள்ளனா்.
இதில், 115 மாணவா்கள் மாவட்ட நிா்வாகத்தின் முன்னெடுப்பின் மூலம் நிதி உதவி பெற்றுள்ளனா்.
இந்நிலையில், 2 ஆம் கட்ட முகாம் ஜூலை 13- ஆம் தேதி முதல் ஜூலை 16 -ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் மூலம் 228 மாணவா்கள் பயனடைந்துள்ளனா் என்றனா்.