புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 2 போ் கைது
வெள்ளக்கோவில் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் முத்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, முத்தூா் -காங்கயம் சாலை செட்டியாா்பாளையத்தில் உள்ள மளிகைக் கடையில் சோதனை செய்தபோது, அங்கு விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரான வசந்தி (48) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, முத்தூா் ஊடையம் சேனாபதி நகரைச் சோ்ந்த பொன்னுசாமி (42) என்பவரது கடையில் இருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரையும் கைது செய்தனா்.