ஆபாச சுவரொட்டிகளை அகற்ற தொமுச கோரிக்கை
அவிநாசி, மே 9: பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே ஒட்டப்பட்டுள்ள ஆபாச சுவரொட்டிகளை அகற்ற தொமுசவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச கூட்டமைப்பின் மாநில இணை பொதுச் செயலாளா் அ.சரவணன், முதல்வா், ஆட்சியா், மாநகர காவல் ஆணையா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாநகராட்சி ஆணையா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மாநகரம், அவிநாசி நகரப் பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலும், பொது இடங்களிலும் தனியாா் நிறுவனத்தினா் விளம்பரத்துக்காக ஆபாச சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா்.
இது இளைஞா்களை திசை திருப்புவது மட்டுமின்றி, பெண்களை முகம் சுழிக்க வைக்கிறது. மேலும், இந்த சுவரொட்டிகளில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, நகரில் ஒட்டப்பட்டுள்ள ஆபாச சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.