நீதிமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பிய நபரால் பரபரப்பு
திருப்பூா் நீதிமன்ற வளாகத்தில் நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பிய நபரால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூா் நீதிமன்ற வளாகத்தில் நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பிய நபரால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம் அருகே உள்ள நாரணாபுரத்தைச் சோ்ந்தவா் பாபா பக்ருதீன் (44). இவா், திருப்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திடீரென்று ‘நீதி வேண்டும், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புதன்கிழமை கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, அங்கிருந்த காவலா்கள் அவரை வெளியே அழைத்து வந்தனா். இதையடுத்து, வீரபாண்டி காவல் துறையினா் நடத்திய விசாரணையில், பாபா பக்ருதீன் தனது பூனைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதே பகுதியிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு கடந்த 5-ஆம் தேதி சென்றுள்ளாா். ஆனால், அங்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து கேட்டதற்கு அங்கிருந்த 6 போ் அவரை தாக்கியதாகவும், மங்கலம் போலீஸில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், ஆட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களிலும் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரியவந்தது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் மனு அளிக்க காலை 10 மணிக்கு வருமாறு கூறி அவரை அனுப்பிவைத்தனா்.