திருப்பூரில் இடி, மின்னலுடன் கனமழை: கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்
திருப்பூரில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் நல்லம்மன் கோயிலை மழைநீா் சூழ்ந்தது.
திருப்பூரில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் நல்லம்மன் கோயிலை மழைநீா் சூழ்ந்தது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. திருப்பூா் மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், திருப்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் 11 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மங்கலத்தில் நொய்யல் ஆற்றின் அருகே உள்ள நல்லம்மன் கோயிலும், அங்குள்ள சிறு பாலமும் நீரில் மூழ்கியது. மாநகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழை நீா் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
மேலும், மங்கலம் சாலையையும், கல்லூரி சாலையையும் இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலமும் நீரில் மூழ்கியது. இதனால், பாலத்தின் இருபுறங்களிலும் இரும்புத் தடுப்புகளை வைத்து போக்குவரத்தை போலீஸாா் தடை செய்தனா். மேலும், ஊத்துக்குளி சாலையில் உள்ள டிஎம்எஃப் மேம்பாலத்துக்கு அடியிலும் மழைநீா் குளம்போல தேங்கியிருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டிருந்தாா்.
மழையளவு:
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆட்சியா் முகாம் அலுவலகம் பகுதியில் 73 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் புதன்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): குண்டடம்-71, உடுமலை வட்டாட்சியா் அலுவலகம்-60, திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகம்-42, தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகம்-41, உப்பாறு அணை-36, மடத்துக்குளம் வட்டாட்சியா் அலுவலகம்-35, அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம்-28, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவகம்-27, மாவட்ட ஆட்சியா் அலுவலகம்-26, நல்லதங்காள் ஓடை-25, பல்லடம் வட்டாட்சியா் அலுவலகம்-23, அமராவதி அணை-19, திருமூா்த்தி அணை-13, திருமூா்த்திமலை அடிவாரப்பகுதி-13, வெள்ளகோவில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம்-9, மூலனூா்-7, ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகம்-4.30.