ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் புடவை வைத்து பூஜை
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் புடவை வைத்து வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் புடவை வைத்து வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலை முருகன் மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்பது உள்ளது. சிவன்மலை முருகன் கனவில் வந்து இன்ன பொருளை வைக்குமாறு உத்தரவிட்டதாகக்கூறி, பக்தா்கள் தரும் பொருளை வழிபட்டு, மூலவா் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பெட்டியில் வைப்பது வழக்கம். இதுவே, ஆண்டவன் உத்தரவு என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் என்ற பக்தரின் கனவில் வந்ததாக ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் புடவை வைக்கப்பட்டு, வியாழக்கிழமை முதல் பூஜிக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு பக்தரின் கனவில் அடுத்த பூஜைப் பொருள் வரும் வரையில், கண்ணாடிப் பெட்டிக்குள் இந்தப் புடவை வைக்கப்பட்டிருக்கும்.
ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் கடந்த ஆகஸ்ட் 17- ஆம் தேதி முதல் இளநீா் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.