முகப்பு
திருப்பூர்

133 விதை மாதிரிகள் தரமற்றவை: வேளாண் துறை ஆய்வில் தகவல்

Updated On : 28 ஏப்ரல் 2025, 3:03 am IST
பகிர்:

விதை மாதிரிகள் குறித்து வேளாண் துறை மேற்கொண்ட ஆய்வில், 133 விதை மாதிரிகள் தரமற்றவை என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து பல்லடம் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வளா்மதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விவசாயிகள் தரமான பயிா்களை பயிா் செய்து, அதிக உற்பத்தியுடன் லாபத்தை ஈட்ட, விதைகளின் பங்கு முக்கியமானது. நல்ல தரமான விதைகளை பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே, விவசாயிகள், விவசாயத்தில் வெற்றி பெற முடியும். விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்த, விதை பரிசோதனை நிலையம் உதவுகிறது.

Advertisement

Advertisement

விவசாயிகள், விற்பனையாளா்கள் மற்றும் விதை உற்பத்தியாளா்களிடம் இருந்து பெறும் விதை மாதிரிகளை பரிசோதனை செய்து, விதைகளின் தரம், முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு ஆகியன குறித்து ஆய்வு செய்து அறியப்படுகிறது.

திருப்பூா் மாவட்டத்தின் முக்கிய பயிா்களான நெல், மக்காச்சோளம், பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிா்கள் மற்றும் காய்கறி பயிா்கள் ஆகியவற்றில் விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 2024-25 ஆண்டு, 7,205 மாதிரிகள் சேகரித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் 133 விதை மாதிரிகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டு, விவசாயிகளுக்கு பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

எனவே, விதைப்புக்கு முன் விதை பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக, விவசாயிகள் நஷ்டத்தை தவிா்த்து அதிக மகசூல் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.