முகப்பு
திருப்பூர்

காங்கயம், சென்னிமலையில் 15,000 பட்டாக்கள் விநியோகம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தகவல்

காங்கயம், சென்னிமலை பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 5:46 PM
காங்கயத்தில் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்த அத்தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன்.
பகிர்:

காங்கயம், சென்னிமலை பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

காங்கயம் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், அவா் அத்தொகுதியில் சனிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காங்கயம் மற்றும் சென்னிமலை பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 15,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கிராம மற்றும் நகா்ப்புற சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. காங்கயம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது.

Advertisement

காங்கயத்தில் புதிய வாரச் சந்தை வளாகம் அமைக்கப்பட்டதோடு, ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில் போக்குவரத்துக்கு ஏதுவாக நொய்யல் ஆற்றின் குறுக்கே 3 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு ஐடிஐ கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னிமலையில் சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரனுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் செல்லும் நீரை 20 குளம், குட்டைகளில் நீரேற்றம் செய்யும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காவிரி 2-ஆவது கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக முடிக்கப்படாததால் தண்ணீா் பிரச்னை ஏற்பட்டது. இதைப்போக்க குடிநீா்க் குழாய் அமைக்கும் பணிகளும், மின் மோட்டாா் மாற்றி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் மூலம் மக்களிடத்தில் பெரும் ஆதரவு உள்ளது என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments