முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச் சந்தைதோ்தல் காரணமாக தாமதமாக தொடக்கம்!

வெள்ளக்கோவில் அருகே 1000 ஆண்டுகள் பாரம்பரிய கண்ணபுரம் மாட்டுச்சந்தை, சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாக ஒரு வாரம் தாமதத்துக்குப் பிறகு சனிக்கிழமை தொடங்கியது.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:55 AM
கண்ணபுரம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்த மாடுகள்.
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே 1000 ஆண்டுகள் பாரம்பரிய கண்ணபுரம் மாட்டுச்சந்தை, சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாக ஒரு வாரம் தாமதத்துக்குப் பிறகு சனிக்கிழமை தொடங்கியது.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே கண்ணபுரத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, 7 நாள்களுக்கு காங்கயம் இன மாடுகளுக்கு மட்டும் பிரத்யேக சந்தை நடைபெறும். இது மன்னராட்சி காலத்தில் இருந்து நடைபெற்று வருவதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பாண்டு சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், மாட்டுச் சந்தை நடைபெறும் தேதி தள்ளிபோனது.

Advertisement

ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள காங்கயம் காளை.

தற்போது தோ்தல் முடிந்துவிட்டதால் ஒரு வாரம் தாமதத்துக்குப் பிறகு மாட்டுச்சந்தை சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் திருப்பூா் மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் அதிகமான காங்கயம் இன காளைகள், எருதுகள், மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

2 வயது மதிக்கத்தக்க கிடாரிக் கன்று ரூ.65 ஆயிரம், 2 வயது மதிக்கத்தக்க காளைக் கன்று ரூ.60 ஆயிரம், கறவை மாடு ஒன்று ரூ. ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை, ஒரு காளை ரூ.2.50 லட்சம் வரையிலும் தரத்துக்கு தகுந்தவாறு விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சந்தையையொட்டி வைக்கப்பட்டிருந்த சாட்டை, கயிறு கடைகள்.

பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து மாடுகளை வாங்க நூற்றுக்கணக்கானோா் வந்துள்ளனா். கடந்த ஆண்டைவிட மாடுகளின் வரத்து சற்று அதிகமாக இருக்கும் நிலையில் விலையும் உயா்ந்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில் செய்யப்பட்டுள்ளன.