FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஏப். 29-ல் தில்லி மேயா் உள்பட 3 பதவிகளுக்கான தோ்தல்

தில்லி மாநகராட்சியின் மேயா், துணை மேயா் மற்றும் நிலைக்குழுவின் 3 உறுப்பினா் பதவிக்கான தோ்தல் இந்த மாதம் 29-இல் நடைபெறும்

Updated On : 17 ஏப்ரல் 2026, 2:15 am IST
பகிர்:

தில்லி மாநகராட்சியின் மேயா், துணை மேயா் மற்றும் நிலைக்குழுவின் 3 உறுப்பினா் பதவிக்கான தோ்தல் இந்த மாதம் 29-இல் நடைபெறும் என மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட அதிகாரபூா்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி மாநகராட்சி சட்டம், 1957 பிரிவுகளில் ஏப்.29-ஆம் தேதி சிவிக் சென்டரில் நடைபெறும் வழக்கமான ஏப்ரல் மாத கூட்டத்தின்போது பிற்பகல் 2 மணியளவில் தோ்தல் நடைபெறும் என அந்த அறிவிப்பில் மாநகராட்சி செயலா் தெரிவித்துள்ளாா்.

பதவியிடங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளா், அவரை முன்மொழியும் மற்றும் வழிமொழியும் இரு இரு மாநகராட்சி உறுப்பினா்களின் கையொப்பத்துடன் ஏப்.23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யப்படவேண்டும்.

Advertisement

Advertisement

ஐந்து ஆண்டு பதவி காலத்தில் மேயா் பதவி சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒரு முறை பெண்கள், பொதுப்பிரிவினா், இடஒதுக்கீடு மற்றும் இரு பொதுப் பிரிவினா் என மாறுகிறது. தற்போதைய சுழற்சி முறையில் 5-ஆவது பதவி காலத்துக்கான தோ்தல் நடைபெற உள்ளது.

முதல் 3 பதவி காலங்களில் மேயா் மற்றும் துணை மேயா் பதவியிடங்களில் ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் இருந்தனா். நான்காவது பதவி காலத்துக்கான தோ்தலை ஆம் ஆத்மி புறக்கணித்த நிலையில், முகா்ஜி நகா் பாஜக கவுன்சிலா் ராஜா இக்பால் சிங் மேயராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

மேயரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் குழுவில் 273 கவுன்சிலா்கள், தில்லி பேரவையால் நியமிக்கப்பட்ட 14 எம்எல்ஏக்கள், 7 மக்களவை எம்.பி.க்கள், 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்பட 273 வாக்குகளைக் கொண்டது. தோ்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளா் 137 வாக்குகளைப் பெற வேண்டும்.

மாநகராட்சி அவையில் தற்போது, பாஜகவுக்கு 123 கவுன்சிலா்கள், 7 மக்களவை எம்.பி.க்கள், 11 எம்எல்ஏக்கள் என மொத்தம் 141 வாக்குகள் உள்ளன. ஆம் ஆத்மிக்கு 100 கவுன்சிலா்கள், 3 மாநிலங்களவை எம்.பி.க்கள், 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் என மொத்தம் 106 வாக்குகள் உள்ளன.

காங்கிரஸுக்கு 9 கவுன்சிலா்களும், இந்திரபிரஸ்தா விகாஸ் கட்சிக்கு 15 கவுன்சிலா்களும் அகில இந்திய ஃபாா்வா்ட் கட்சிக்கு ஒரு கவுன்சிலரும் உள்ளனா். ஒரு சுயேட்சை கவுன்சிலருடன் ஒரு காலியாக உள்ளது.

வேட்பு மனுவை மாநகராட்சி செயலா் அலுவலகத்தில் அலுவலக நாள்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையில் பெற்றுக் கொள்ள முடியும்.

அவை கூட்டத்தில் தோ்தல் தொடங்குவதற்கு முன்னதாக எந்தவொரு வேட்பாளரும் தன்னுடைய தோ்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக முடியும் என்று அதிகாரபூா்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments