பெருமாநல்லூா் அருகே அகற்றப்பட்ட குமரன்குன்று செல்வமுத்துக்குமரன் கோயில் மீண்டும் அமைய வேண்டி 108 தேங்காய் உடைத்து இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை வேண்டுதலில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்குள்பட்டது ராக்கியாபட்டி பகுதி. இங்கு 2.8 ஏக்கா் பரப்பளவில் இருந்த அரசு நிலத்தில் செல்வமுத்துகுமரன் கோயில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஜனவரி 7-ஆம் தேதி கோயில் இடித்து அகற்றப்பட்டது.
இதையடுத்து மீண்டும் கோயில் அமைய வேண்டியும், உரிய நீதி கிடைக்க வேண்டியும் பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் இந்து முன்னணியினா், கோயில் மீட்புக் குழுவினா், பாஜகவினா் உள்ளிட்டோா் 108 தேங்காய் உடைத்தனா்.
இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநிலப் பொதுச் செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் சின்னசாமி, பொறுப்பாளா் சாமிநாதன், கோட்ட செயலாளா் குறிஞ்சி சேகா், அன்னையா் முன்னணி இயக்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.