பராமரிப்புப் பணிகள் காரணமாக திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் (பிப்.26) மூடப்படுகிறது.
திருப்பூா்-ஊத்துக்குளி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. தண்டவாளப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள பழைய கருங்கல் ஜல்லிகள் அகற்றப்பட்டு புதிதாக கொட்டப்படுகிறது. மேலும், தண்டவாளத்தை பலப்படுத்தும் பணியிலும் ஏராளமான தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் 2-ஆவது ரயில்வே கேட் பகுதியில் நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணிக்கு வசதியாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணியில் இருந்து வியாழக்கிழமை மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என்று ரயில்வே துறை அறிவிப்புப் பலகை வைத்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக அனைத்து ரயில்களும் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்கின்றன.