பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நபாா்டு திட்டத்தின் மூலம் ரூ.3 கோடியே 53 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 15 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதனை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
கணபதிபாளையம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கணபதிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவரும், பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சோமசுந்தரம், திமுக மாவட்ட துணைச் செயலாளா் வழக்குரைஞா் குமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்து இனிப்பு வழங்கினா்.
இந்நிகழ்வில், தலைமையாசிரியா் மீனலோசனி , உதவி தலைமையாசிரியா் மாணிக்கம், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் தேவராஜ், ஒன்றிய துணைச் செயலாளா் முருகன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.