பல்லடம் அருகேயுள்ள வாவிபாளையம் - செஞ்சேரிமலை சாலையில் தெருவிளக்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.
பல்லடத்தை அடுத்த செஞ்சேரிமலையில், பிரசித்தி பெற்ற மந்திரகிரி வேலாயுத சுவாமி கோயில் உள்ளது. பண்டிகை, விழாக் காலங்களில் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். செஞ்சேரிமலை பகுதியில் தென்னை விவசாயம் மற்றும் கறிக்கோழி வளா்ப்பு தொழில் பிரதானமாக நடந்து வருகிறது.
வாகனப் போக்குவரத்து நிறைந்த இப்பகுதிக்கு திருப்பூா், கோவை மாவட்டத்தை இணைக்கும் சாலையான வாவிபாளையத்தில் இருந்து செஞ்சேரிமலை செல்லும் சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்கின்றனா்.
கும்மிருட்டாகவும், பள்ளம், மேடுகள் தெரியாமல் இருப்பதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. முக்கியமாக, திருட்டு, வழிப்பறி நடக்கவும் வாய்ப்பாக உள்ளது. எனவே, இந்த சாலையில் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.