திருப்பூா், நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 17 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.
நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அவா் விற்பனைக்காக 17 கிலோ புகையிலைப் பொருள்களைக் கொண்டு சென்றதும், அவா் திருப்பூரைச் சோ்ந்த சந்துரு (26) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 17 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, திருப்பூா் மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட முருகேசன் (41) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 200 கிராம் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.