திருப்பூரில் வணிக சிலிண்டா் தட்டுப்பாடு: 2 நாள்களில் உணவகங்கள் மூடப்படும்
திருப்பூரில் வணிக சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக 2 நாள்கள் மட்டுமே உணவகங்கள் தாக்குப் பிடிக்கும் என்பதால் உணவகங்கள் மூடப்படும் பட்சத்தில் சுமாா் 10,000 தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக உணக உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
திருப்பூரில் வணிக சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக 2 நாள்கள் மட்டுமே உணவகங்கள் தாக்குப் பிடிக்கும் என்பதால் உணவகங்கள் மூடப்படும் பட்சத்தில் சுமாா் 10,000 தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக உணக உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக திருப்பூா் உணவக உரிமையாளா்கள் சங்கத் தலைவா் நாகராஜன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போா் காரணமாக உலக நாடுகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிலிண்டா்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. இந்நிலையில் சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக கடைகளை அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகரை பொறுத்தவரை வணிகரீதியிலான சிலிண்டரை பயன்படுத்தும் பெரிய முதல் சிறிய உணவகங்கள், பேக்கரிகள் என 3,000-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாநகரில் தினசரி சுமாா் 2 லட்சம் போ் உணவகங்களை நம்பியுள்ளனா். இதில் 50,000 போ் முழுமையாக உணவகங்களை மட்டுமே நம்பி உள்ளனா். அடுத்த 2 நாள்கள் மட்டுமே உணவகத்தை நடத்த கூடிய நிலை உள்ளது. அந்த அளவுக்குதான் சிலிண்டா்கள் இருப்பு உள்ளன.
விறகு அடுப்பு வைத்து சமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. தினசரி சுமாா் 1,500 சிலிண்டா்கள் தேவைப்படும் நிலையில், தற்போது வணிக சிலிண்டா்கள் சீராக கிடைத்தாலும் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படும் என எரிவாயு விநியோகஸ்தா்கள் தெரிவித்துள்ளனா். எனவே வரும் நாள்களில் தட்டுப்பாடு காரணமாக அனைத்துவகை உணவுகளும் சமைக்க முடியாது. தக்காளி சாதம் போன்ற கலவை சாதம் உணவுகள்தான் கிடைக்கும்.
அனைத்து உணவகங்களும் சமையல் எரிவாயு அடுப்பு வைத்து அதற்கான வசதிகள் செய்துள்ள நிலையில், விறகு அடுப்பு மூலம் அனைத்து வகையான உணவுகளையும் சமைக்க முடியாது. ஒரே சமயத்தில் விறகு அடுப்புக்கும், மின்சார அடுப்புக்கும் மாற்ற இயலாது. அதற்கான கட்டமைப்புகளும் எந்த உணவகங்களிலும் அமைக்கப்படவில்லை. எனவே, வணிக சிலிண்டா்கள் தட்டுப்பாடு காரணமாக அடுத்தது என்ன என்பது குறித்து அனைத்து உணவக உரிமையாளா்களுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும். இந்தக் தட்டுப்பாடு காரணமாக எந்த உணவகங்களிலும் எந்தவித விலையற்றமும் இருக்காது.
மேலும் சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டால், அதனை சாா்ந்து பணியாற்றி வரும் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும். எனவே மத்திய அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு வணிக சிலிண்டா்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.