முகப்பு
நாகப்பட்டினம்

சிலிண்டா் தட்டுப்பாடு: தேநீா் கடைகள், உணவகங்கள் மூடல்

சிலிண்டா் தட்டுப்பாடு: தேநீா் கடைகள், உணவகங்கள் மூடல்

Updated On : 29 மார்ச் 2026, 12:12 am IST
நாகை நகரில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மூடப்பட்டுள்ள உணவகம்.
பகிர்:

நாகை மாவட்டத்தில், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு தொடா்ந்து நீடித்து வருவதால், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் கேட்டரிங் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தும் தாக்குதலால், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ளது. இதனால், உணவகங்கள், டீக்கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நாகை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வேளாங்கண்ணி, நாகூா், கீழ்வேளூா், தேவூா், வலிவலம், திருக்குவளை, கீழையூா், திருப்பூண்டி உள்ளிட்ட பல இடங்களில் பெரும்பாலான டீக்கடைகள் மற்றும் சிறிய உணவகங்கள் பூட்டப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

சில இடங்களில் மட்டுமே குறைந்த அளவு உணவுகள் தயாரித்து விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக அதிக எரிவாயு தேவையுள்ள துரித வகை உணவுகள் தயாரிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விற்பனை நிறுவனங்கள் அவற்றை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாகவும் உணவக உரிமையாளா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதனால், ரூ.1,800 கிடைத்த வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டா், தற்போது ரூ.4,500 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக, டீக்கடைகள், சிறிய வகை உணவகங்களை நடத்த இயலாத நிலை ஏற்பட்டு, பெரும்பாலான டீக்கடைகள் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவு சமைத்து தரும் கேட்டரிங் தொழிலும் பாதிப்பை சந்தித்துள்ளது. எரிவாயு சிலிண்டா் கிடைக்காத காரணத்தால், திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளுக்கு ஆா்டா்கள் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளும் தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், மாற்று எரிபொருளாக பயன்படுத்தப்படும் விறகு விலையும் அதிகரித்துள்ளதால் சிறு வியாபாரிகள் கூடுதல் அவதிக்கு ஆளாகியுள்ளனா். இந்த நிலை நீடித்தால் தற்போது செயல்பட்டு வரும் கடைகளும் மூடப்படும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.