முகப்பு
திருப்பூர்

ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூரில் கட்டடத்தில் வேலைசெய்யும்போது ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 7:33 PM
உயிரிழப்பு - (கோப்புப் படம்)
பகிர்:

திருப்பூரில் கட்டடத்தில் வேலைசெய்யும்போது ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பூா் கொங்கு மெயின்ரோடு பகுதியைச் சோ்ந்தவா் சிகாமணி (63). இவா், திருப்பூா் குமரன் சாலை பென்னி காம்பவுண்ட் பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகாமணியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். சிகாமணி உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த அவரது உறவினா்கள் ஏராளமானோா் மருத்துவமனையில் குவிந்தனா்.

இதைத் தொடா்ந்து, சிகாமணியை வேலைக்கு அழைத்த கட்டடத்தின் உரிமையாளா் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவா்கள் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் குமரன் சாலையில் அமா்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுபட்டவா்களிடம் வடக்கு காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், உதவி ஆய்வாளா் சண்முகமூா்த்தி உள்ளிட்ட போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து சாலை மறியலை அவா்கள் கைவிட்டனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் கட்டட உரிமையாளா் உரிய இழப்பீடு வழங்கும் வரை சிகாமணியின் சடலத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.