அவிநாசி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்
அவிநாசி அருகே நல்லிக்கவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை (எண் -2326) அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை கடை முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட நல்லிக்கவுண்டம்பாளையம் பகுதியில் 2326 எண் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை கடந்த 8ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக்கடையை உடனடியாக அகற்றக் கோரி பொதுமக்கள் குழந்தைகள், பள்ளி மாணவா்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
Advertisement
நல்லிக்கவுண்டம்பாளைம், காமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். ஆனால் இப்பகுதியில் உள்ள மதுபானக் கடையால் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை நாள்தோறும் அச்சமடைந்து வருகிறோம். மேலும், மது அருந்தி வாகனம் ஓட்டுபவா்களால், அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே உடனடியாக மதுபானக் கடையை அகற்ற வேண்டும். என்றனா். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் கோரிக்கையை மனுவாக எழுதி வழங்கினால் உரிய பரிசீலனை மேற்கொண்டு இரு வாரங்களுங்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.