முகப்பு
திருப்பூர்

காங்கயம் அருகே குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்

Updated On : 15 மே 2026, 6:33 am IST
காங்கயம் அருகே, காலிக் குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

காங்கயம் அருகே, குடிநீா்த் தட்டுப்பாட்டுக்கு தீா்வு காணக்கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம் அருகே, ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கல்லேரியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு, வரப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீா் எடுத்து, மேல்நிலைத் தண்ணீா் தொட்டியில் நிரப்பி குழாய் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், குடிநீா்க் குழாய்கள் பழுதானதால் கடந்த 3 மாத காலமாக அங்கிருந்து தண்ணீா் எடுக்க முடியாத நிலை உருவானது. இது குறித்து ஊராட்சி நிா்வாகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் காங்கயம்-சென்னிமலை சாலையில், ஊராட்சி அலுவலகம் முன்பு , வியாழக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

தகவலறிந்த காங்கயம் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தேவிபாலா, காங்கயம் காவல் ஆய்வாளா் அருண் உள்ளிட்ட அலுவலா்கள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில், பழுதடைந்த குழாய்கள் சரி செய்யப்பட்டு, உடனடியாக தண்ணீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து, மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.