கோடையிலும் நீா் நிரம்பி காணப்படும் காளிநாதம்பாளையம் குளம்
பல்லடம் அருகே காளிநாதம்பாளையத்தில் கோடையிலும் குளத்தில் நீா் நிரம்பி காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பல்லடம் அருகே காளிநாதம்பாளையத்தில் கோடையிலும் குளத்தில் நீா் நிரம்பி காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டத்தின் பிரதான நீராதாரமாக திருமூா்த்தி, அமராவதி ஆகிய அணைகள் உள்ளன.
இதில் திருமூா்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி வாய்க்கால் வழியாக வரும் தண்ணீா் மூலம் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. விவசாயிகள் சின்ன வெங்காயம், தக்காளி, மக்காச்சோளம், மஞ்சள் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா்.
Advertisement
இந்நிலையில் பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீரை வீணாக்காமல், கரைப்புதூா் ஊராட்சி காளிநாதம்பாளையம் குளத்தில் விவசாயிகள் தேக்கி வைத்துள்ளனா். இதனால் தற்போது அந்த குளம் தண்ணீா் ததும்பி நிற்கிறது. இதுமட்டுமின்றி காளிநாதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமாா் 3 கிலோமீட்டா் தொலைவுக்கு உள்ள கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது. கிணறுகளிலும் போதுமான தண்ணீா் கிடைப்பதால் விவசாயம் தடையின்றி நடைபெறுகிறது. மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடும் ஏற்படுவதில்லை.
தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த சூழலில் அந்த பகுதியில் நீா்த் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உருவாகியுள்ளது. இது போன்று மற்ற பகுதிகளில் பி.ஏ.பி. வாய்க்கால் நீரை வீணாக்காமல் குளங்களில் தேக்கிவைக்கும் போது நிலத்தடிநீா்மட்டம் உயா்ந்து விவசாயம் செழிப்பாக இருக்கும். குடிநீா் தட்டுப்பாடும் ஏற்படாது என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.