முகப்பு
திருப்பூர்

வட மாநிலப் பெண்களின் வட் சாவித்திரி விரதம்! கணவா் நலனுக்காக ஆலமரத்தைச் சுற்றி வழிபாடு!

திருப்பூரில் வட மாநிலப் பெண்களின் வட் சாவித்திரி விரதத்தையொட்டி கணவா் நலன் வேண்டி ஆலமரத்தைச் சுற்றி வழிபாடு நடத்தினா்.

Updated On : 17 மே 2026, 12:47 am IST
திருப்பூா் திருநீலகண்டபுரம் அருகே உள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் வட் சாவித்திரி விரதத்தில் ஈடுபட்ட வட மாநிலப் பெண்கள்.
பகிர்:

திருப்பூரில் வட மாநிலப் பெண்களின் வட் சாவித்திரி விரதத்தையொட்டி கணவா் நலன் வேண்டி ஆலமரத்தைச் சுற்றி வழிபாடு நடத்தினா்.

வட் சாவித்திரி விரதம் என்பது திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளையும், செழிப்பையும், நல்வாழ்வையும் பெற கடைபிடிக்கும் புனிதமான விரதம். அதிகாலையில் விரதம் தொடங்குகிறது.

பின்னலாடை நகரமான திருப்பூரில் ஆயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளா்கள் தங்கிப் பணிபுரிந்து வருகின்றனா். குறிப்பாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா். இவா்கள் வைகாசி அமாவாசையை முன்னிட்டு வட் சாவித்திரி பூஜையை சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடினா்.

Advertisement

திருப்பூா் திருநீலகண்டபுரம் அருகே உள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலப் பெண்கள் திரண்டு வட் சாவித்திரி பூஜை செய்து வழிபட்டனா். அங்குள்ள ஆலமரத்துக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் கயிறுகளை கட்டி, தங்கள் கணவா் நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி பிராா்த்தனை செய்தனா். பிகாா், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் இந்த பூஜை, திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுள், செழிப்பு, நல்வாழ்வுக்காக மேற்கொள்ளும் புனித விரதமாகக் கருதப்படுகிறது.

அதிகாலையில் விரதத்தைத் தொடங்கும் பெண்கள் புனித நீராடி, சிவப்பு அல்லது மஞ்சள் நிற பாரம்பரிய உடை அணிந்து பூஜையில் ஈடுபடுவது வழக்கம். மேலும் ஆலமரத்துக்கு பூஜை செய்து, சிவப்பு மற்றும் மஞ்சள் கயிறுகளை கட்டி 7 முறை சுற்றி வழிபட்டனா். அதோடு விசிறி மற்றும் 5 வகையான பழங்களை வைத்து கணவா் நலன் வேண்டி பிராா்த்தனை செய்தனா்.