சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
சித்ரா பௌர்ணமி வழிபாடும் முக்கியத்துவமும் பற்றி..
புண்ணிய காரியங்களைச் செய்ய நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. இருந்தாலும் சில நல்ல காரியங்களைச் சில புண்ணிய தினத்தில் செய்வது நல்லதென்று இந்து தர்மம் வகுத்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் சித்ரா பௌர்ணமி தினத்தில் செய்யப்படும் அன்னதானம்.
அன்னதானத்துக்கு ஏன் "சித்ரா பௌர்ணமி" திருநாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? காரணம் உள்ளது. அது சித்திரகுப்தன் என்ற தேவனின் பிறந்த நாள். யார் அந்த சித்திரைகுப்தன் என்றால் நம் மரணத்திற்குப் பிறகு எமலோகம் செல்லும்போது நாம் செய்த பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்துச் சொல்பவர் தான் இந்த சித்ர குப்தன்.
சித்ரா பௌர்ணமி என்றாலே சித்திர குப்தனின் நினைவும், பாவங்கள் செய்தால் நரக தண்டனை நிச்சயம் என்ற உணர்வும் அனைவருக்கும் ஏற்பட்டுவிடும். அந்த நினைவில், பண்ணிய பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக அன்னதானம் செய்ய வேண்டுமென்ற எண்ணமும் உருவாகும். அதற்காகத்தான் "சித்ரா பௌர்ணமி' தினத்தை, அன்ன தானத்துக்கு உகந்த நாள் என்று அறிவித்தனர் நமது முன்னோர்கள்.
Advertisement
Advertisement
காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தனுக்கென்று தனி ஆலயம் அமைந்துள்ளது. முடிந்தவர்கள் அங்குச் சென்று சித்ரகுப்தனுக்கு சர்க்கரைப் பொங்கல், இளநீர், அப்பம், பானகம் போன்ற உணவுகளைப் படைத்து வழிபடலாம். காஞ்சிக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டு அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு வரலாம். மேலும், அன்றைய தினம் நம்மால் இயன்ற நான்கு பேருக்காவது அன்னதானம் வாங்கிக் கொடுக்கலாம்.
சித்ரா பௌர்ணமி காலப் போக்கில் சுற்றமும் நட்பும் சேர்ந்துகொண்டு, விதம் விதமாகச் சமைத்து, கடற்கரை, ஆற்றங்கரையோரம், அப்படி இல்லாதவர்கள் வீட்டு மொட்டை மாடியில் நமக்கு நாமே உணவருந்தி மகிழும்படி திரிந்துவிட்டது. அன்றைய தினத்தில் சமைக்கப்படும் புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றுக்கு "சித்ரான்னம்" என்று பெயரும் சூட்டிவிட்டோம். ஆனால் உண்மையான சித்ரா பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கும், அன்னதானத்துக்கும் உரியது. அதற்கான வாய்ப்பை நமக்கு உருவாக்கித் தருவதற்காகவே, சித்ரா பௌர்ணமியை ஒட்டி பல ஆலயங்களில் திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன.
சித்ரா பெளர்ணமியன்று விரதம் இருப்பதால் என்ன பலன்?
சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப் போல மாக்கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்குச் செல்லாமல் இருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று நம்மை அறியாமலேயே கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நாம் நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பௌர்ணமி பூஜையின் மானசீக பலன். பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவர் சித்ரகுப்தர். பாவ வழியில் நம் மனதைச் செலுத்தவிடாமல் புண்ணிய வழியில் செலுத்தி நம் மனதைச் செம்மையாக்கிப் பக்குவப்படுத்துபவர். எனவே அன்றைய தினம் நாம் அனைவரும் சித்ரகுப்தனை வணங்கி அவனது அருளைப் பெறுவோம்.
சித்ரா பௌர்ணமி அன்று பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், கிரிவலம் சிறப்பு பெற்றவையாக விளங்குகிறது.
Hindu Dharma prescribes that performing certain virtuous deeds on specific auspicious days is meritorious. One such act is the offering of food (Annadanam) on the day of Chitra Pournami.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.