திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகே சிக்னல் இல்லாத போக்குவரத்து மாற்றம்
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகே சிக்னல் இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அருகே சிக்னல் இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது: திருப்பூா் குமரன் சாலை, மாநகராட்சி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவின்பேரில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் ‘நோ சிக்னல், நோ டிராஃபிக்’ என்ற முறையில் சிக்னல் இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
அந்த வகையில் திருப்பூா் மாநகராட்சி சந்திப்பிலும் சிக்னல் இல்லாத போக்குவரத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், 2 இரும்புத் தடுப்புகள் அமைத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் குமரன் சாலையில் இருந்து மங்கலம் செல்லும் வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் செல்லும் வகையிலும், காமராஜா் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அவிநாசி சாலையை அடைய மங்கலம் சாலை சென்று ஆலங்காடு வழியாகச் செல்லும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்காமல் செல்கின்றனா்.
Advertisement
மாநகராட்சி அலுவலக சிக்னல் அருகே காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றனா்.