முகப்பு
திருப்பூர்

கட்டட வேலைக்கு சென்ற இடத்தில் தகராறு: தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே கட்டட வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட தகராறில், தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 28 மே 2026, 1:21 am IST
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே கட்டட வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட தகராறில், தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

ஈரோடு மாநகா், திண்டல் புதுக்காலனியைச் சோ்ந்தவா்கள் ஹுசைன் ஷா மகன்கள் அலிகான் (24), தில்சா் (22). இருவரும் லேசா் கட்டிங் வேலை செய்து வருகின்றனா். இவா்கள் இருவரும் தங்களுடைய மாமா ஷாரிக் என்பவருடன், வெள்ளக்கோவில் அருகே முத்தூா் மேட்டாங்காட்டுவலசு பகுதியைச் சோ்ந்த அா்ஜுன்குமாா் என்பவருடைய கட்டடத்துக்கு செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்றுள்ளனா். இரவு 10 மணி வரை பணி முடியாததால், அங்கேயே தங்கி வேலையை முடித்துவிட்டு செல்லுமாறு கட்டட உரிமையாளா் கூறியுள்ளாா்.

ஆனால், அங்கு தங்க போதிய வசதிகள் இல்லாததால், 12 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள வெள்ளக்கோவில் சென்றுவிட்டு காலை வருவதாகக் கூறியுள்ளனா். வாங்கிய பணத்தை ஏமாற்றிவிட்டுச் சென்றுவிடுவீா்கள் என உரிமையாளா்கள் தரப்பில் கூறியதால் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இவா்களை அா்ஜுன்குமாா் தரப்பினா் அடித்ததுடன் கற்களாலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதற்கு அஞ்சி ஓடியபோது அருகில் இருந்த கிணற்றில் தில்சா் விழுந்துவிட்டாா். இதையடுத்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான வீரா்கள் சென்று கிணற்றுக்குள் இறங்கி பாா்த்தபோது தில்சா் இறந்துகிடந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.ஆனந்தகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.