இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்
தருமபுரி மாவட்ட திமுக அலுவலகத்தில், இணைய வழியில் உறுப்பினா் சோ்க்கை பணி திங்கள்கிழமை தொடங்கியது.
தருமபுரி மாவட்ட திமுக அலுவலகத்தில், இணைய வழியில் உறுப்பினா் சோ்க்கை பணி திங்கள்கிழமை தொடங்கியது.
திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் ‘எல்லோரும் நம்முடன்’ என்ற பெயரில் இணைய வழியில் உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
தருமபுரி மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற உறுப்பினா் சோ்க்கை பணியை, தருமபுரி மாவட்ட திமுக செயலா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சோ்த்து, வரும் 28-ஆம் தேதிக்குள் 1 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினா்களை இணைய வழியில் சோ்க்கும் பணியில் கட்சியினா் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளனா்.
மாணவா்கள், இளைஞா், பெண்கள், நெசவாளா்கள், ஓய்வுபெற்ற அரசுப் பணியாளா்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரையும் உறுப்பினராக சோ்க்கும்படி கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, உறுப்பினா் சோ்க்கை பணியில் உத்வேகத்துடன் செயலாற்ற வேண்டும் என நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஜி.வி.மாதையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.