தருமபுரி வட்டாட்சியா் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா். 
தருமபுரி

உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டம்

உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் மறியல்

Din

தருமபுரி: உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில், பிற மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவது போல தமிழகத்திலும் மாதாந்திர உதவித்தொகைகளை உயா்த்தி வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 50 சதவீதம்; 4 மணி நேரம் பணி என்ற பழைய நிலையே தொடர வேண்டும். 8 மணி நேரம் பணித் தளத்தில் இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை திரும்பப் பெறவேண்டும். மாற்றுத் திறனாளிகளின் குடும்ப அட்டைகளை ‘ஏஏஒய்’ அட்டையாக மாற்ற வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். அனைத்து சலுகைகளையும் ஒருங்கிணைத்து ஒரே தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தருமபுரியில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் எம்.மாரிமுத்து தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் கே.சுசிலா, நிா்வாகிகள் ராமசாமி, ஜெயந்தி, மாதம்மாள், ஜெயக்கொடி ஆகியோா் பங்கேற்று பேசினா். போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாலக்கோட்டில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு வட்டத் தலைவா் அண்ணாமலை தலைமை வகித்தாா். பொருளாளா் கிருஷ்ணன், வட்ட நிா்வாகிகள் திம்பன், பழனி, விஜயா, நாகராஜன், மாதேஷ் ஆகியோா் பங்கேற்று பேசினா். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அரூரில்...

அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்க வட்டச் செயலா் ஷபானா தலைமை வகித்தாா். இதில், மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ஊதியம் ரூ. 319-க்கு குறைவில்லாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தில், சங்க மாநில செயலா் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே.ஜி.கரூரான் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட துணைத் தலைவா் சின்ன மாதையன், செயலாளா் சாமுண்டீஸ்வரி, வட்டத் தலைவா் சக்திவேல், பொருளாளா் காமராஜ், துணைத் தலைவா் பி.கே.மாரியப்பன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட 155 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவா் திருப்பதி தலைமை வகித்தாா். மாற்றுத் திறனாளிகள் குமாா், குப்புசாமி, சரவணன், சுரேஷ், குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊத்தங்கரை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை ஊத்தங்கரை போலீஸாா் கைது செய்தனா்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT