தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி! எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
எடப்பாடி தொகுதியில் போட்டியிட எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக எடப்பாடிக்கு வந்த அவருக்கு நகர அதிமுக சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து எடப்பாடி தைனாம்பட்டியில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் அங்கு அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
எடப்பாடி தொகுதியில் 8-ஆவது முறையாக அதிமுக வேட்பாளராக போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாசிகளுடன் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் சென்றார். அங்கு எடப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு தற்போது முடக்கப்பட்டுள்ள திட்டங்கள் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தொடர்ந்து செயல்படுத்தப்படும். முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுவதுபோல், இது தில்லிக்கான தேர்தல் அல்ல. தமிழகத்துக்கான தேர்தல் இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
Advertisement
எடப்பாடி தொகுதியில் 8-ஆவது முறையாக போட்டியிடும் நான் கடந்த காலங்களில் தொகுதி மக்கள் வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளேன். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விடுபட்ட கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும்.
திமுக அமைச்சர்கள் மீது ஆதாரங்களுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை சமர்ப்பித்துள்ளோம். அதன்பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய வேண்டும். இதுகுறித்து 3 முறை தமிழக காவல் துறை சட்டம் - ஒழுங்கு டிஜிபிக்கு அறிக்கை அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்படும். பேரவைத் தேர்தலில் திமுக - தவெகஇடையே மட்டும்தான் போட்டி என கூறுவது விஜய்யின் அறியாமை.
பிரசார கூட்டத்தில் பிரதமருடன் பங்கேற்பு: வரும் 15-ஆம் தேதி கன்னியாகுமரியில் பிரதமர் பங்கேற்கும் பிரசார கூட்டத்தில் நானும் பங்கேற்கிறேன் என்றார் எடப்பாடி பழனிசாமி.