எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரை
எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பிறகு தம்பிதுரை பேட்டி...
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்பார் என்று அதிமுக எம்பி தம்பிதுரை வெள்ளிக்கிழமை காலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்துவிட்டு திரும்பிய தம்பிதுரை செய்தியாளர்களுடன் பேசினார்.
Advertisement
அவர் பேசியதாவது:
“தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அதுபற்றி கூறமுடியாது. நல்லதே நடக்கும் என்று நம்பப்படுகிறது.
அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார், நல்லாட்சி தருவார். அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கடவுளின் ஆசியுடன் அது நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில், பெரும்பான்மை எண்ணிக்கைக்கு இன்னும் 6 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுகின்றனர். விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் நிலையில், அக்கட்சிகள் அவர்களின் செயற்குழுக் கூட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இன்று மாலைக்குள் விசிக, இடதுசாரிகள் அவர்களின் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள அதிமுகவும் ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பிற கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.