முகப்பு
தருமபுரி

பாப்பாரப்பட்டியில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தொழிலாளி

Updated On : 20 ஏப்ரல், 2026 at 2:19 AM
குத்திக் கொலை - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 11:20 PM

பாப்பாரப்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயற்சித்த முடிதிருத்தும் தொழிலாளியை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள நல்லப்பநாயக்கனஅள்ளி பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் முருகேசன் (25). இவா், பென்னாகரம் பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறாா். இவருக்கும் முதுகம்பட்டி அருகே உள்ள பாக்கியம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த விஜயலட்சுமிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மூன்று குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருவரும் பாப்பாரப்பட்டி மருத்துவமனைக்கு வந்துவிட்டு வீடுதிரும்பியபோது மாட்டுச்சந்தை பகுதியில் உள்ள கழிப்பறை வளாகத்தில் விஜயலட்சுமியை முருகேசன் கழுத்தறுத்து கொலை செய்துள்ளாா். பின்னா், தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தபோது அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதியைச் சோ்ந்தவா்கள், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளா் ரௌத்ரி வெங்கடேசன் உள்ளிட்டோா் அடங்கிய போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.