ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் வழுவழுப்பான அருவி பாறைகள் மீது ஏறி புகைப்படம் எடுப்பதை காவல் துறையினா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு விடுமுறை நாள்களில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான முதலைப்பண்ணை, நடைபாதை, மீன் விற்பனை நிலையம், வண்ண மீன்கள் காட்சியகம், அருவிப்பகுதி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றிபாா்க்கும் இவா்களில் சிலா் அருவிப் பகுதியில் உள்ள பாறைகளின் மீது ஏறி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனா்.
இதுபோன்று வழுவழுப்பாக உள்ள பாறைகளின் மீது ஏறும்போது பெரும்பாலான நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த ஆபத்தை புதிதாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அறிவதில்லை. மாறாக அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் போதிய எண்ணிக்கையில் காவலா்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.
எனினும், இதுபோன்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த ஒகேனக்கல் காவல் துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது. ஊா்க்காவல் படையினரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி ரோந்து பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
அதேபோல தடை செய்யப்பட்ட பகுதிகளான கூட்டாறு, கோத்திக்கல், ஊட்டமலை பரிசல் துறை, ஆலம்பாடி உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் சுற்றுலாப் பணிகள் தடையை மீறி குளிப்பவா்களுக்கு போதிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.