முகப்பு
தருமபுரி

விவசாயி கொலை வழக்கில் மற்றொரு விவசாயிக்கு ஆயுள் தண்டனை

Updated On : 31 மார்ச் 2026, 1:55 am IST
கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி அருகே நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த மற்றொரு விவசாயிக்கு ஆயுள்தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பெரும்பாலை அருகே உள்ள கோவள்ளி கோம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி (50), விவசாயி. இவருக்கு மனைவி, இரு மகள்கள், மகன் உள்ளனா். அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு விவசாயி குபேந்திரன் (42). இவா்களுக்கு இடையே வீட்டருகே உள்ள பொதுவழி தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடா்பாக இருதரப்பினரும் அடிக்கடி தகராறில் ஈடுட்டு வந்தனா்.

இந்நிலையில், கடந்த 2022 மே மாதம் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன் தொடா்ச்சியாக, மே 29-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற கந்தசாமியை வழிமறித்த குபேந்திரன், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்து கீழேவிழுந்த கந்தசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். குபேந்திரன் தப்பியோடினாா். இதுகுறித்து பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து குபேந்திரனை கைதுசெய்தனா்.

Advertisement

Advertisement

தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கொலை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு குபேந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி மோனிகா தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சக்திவேல் ஆஜரானாா்.