கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை
சேலம், ஜன. 8: நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அலுவலர் பாதுகாப்புச் சங்கம் வலிய
சேலம், ஜன. 8: நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அலுவலர் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.கோபிநாதன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சாலை விபத்துகளால் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அவர்கள் அரசுப் பணிகளில் சேருவதற்கான வயது வரம்பைத் தளர்த்த வேண்டும்.
தட்டச்சர் பதவியை கணினி உதவியாளர் என பெயர் மாற்றம் செய்து அனைத்துத் துறைகளிலும் கணினி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்துத் துறைகளிலும் கருணை அடிப்படையில் பணி கோரி அளிக்கப்பட்ட நிலுவை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் மிக அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் அனைத்துத் துறைகளுக்கும் புதிதாக தளவாடப் பொருள்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலப் பொருளாளர் பி.பரமசிவம், செயலர் ஆர்.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.